Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

குடிப்பழக்கத்தால் கணையம் பாதித்த கூலி தொழிலாளிக்கு - கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 7 மணி நேர அறுவைசிகிச்சை :

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன்(43). எலெக்ட்ரீஷியன். குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் உடல்நிலை மோசமடைந்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 9-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனையில் அவரது கணையத்தில் நீர்க்கட்டி உண்டாகி, ரத்த நாளங்கள் வெடித்து, சிறுகுடல் வழியாக மலக்குடலில் ரத்தப்போக்கு ஏற்பட்டிருந்ததும், கணையத்தைச் சுற்றி ரத்த நாளங்கள் விரிவடைந்திருந்ததும் தெரியவந்தது.

கணையப் பிரச்சினைக்கு அறுவைசிகிச்சை செய்தால் 50 முதல் 70 சதவீதம் மரணம் ஏற்படும் வாய்ப்புள்ளது என்பதால், மருத்துவமனை டீன் சாந்திமலர் மேற்பார்வையில், இரைப்பை, குடல், கணையம் மற்றும் கல்லீரல் அறுவைசிகிச்சை துறைத் தலைவர் எல்.ஆனந்த் தலைமையிலான குழுவினர் ‘காயில் எம்போஸைசேஷன்’ முறைப்படி கட்டுப்படுத்த முயன்றும், ரத்தப்போக்கை சரி செய்ய முடியவில்லை.

இதையடுத்து, அவருக்கு 7 மணி நேரம் அறுவைசிகிச்சை செய்து, ரத்தம் கசிந்த ரத்த நாளங்களை சரிசெய்தனர். ரத்தப்போக்கு நிறுத்தப்பட்டு, மஞ்சள்காமாலையும் சரிசெய்யப்பட்டப் பின்னர், பூரணமாக குணமடைந்த அறிவழகன் வீடு திரும்பியுள்ளார்.

இதுகுறித்து டீன் சாந்திமலர், துறைத் தலைவர் எல்.ஆனந்த் கூறும்போது, ``இது மிகவும் அரிதான அறுவைசிகிச்சையாகும். ரத்தக் கசிவு இருக்கும்போது அறுவைசிகிச்சை செய்தால் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனாலும், அவரது உயிரைக் காப்பாற்ற வேறு வழியில்லை. அதனால், மிகுந்த கவனத்துடன் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். அவரிடம் குடிப்பழக்கத்தை நிறுத்துமாறு தெரிவித்துள்ளோம்.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவசமாக செய்யப்பட்டுள்ள இந்த அறுவைசிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்ய ரூ.10 லட்சம் வரை செலவாகும்'' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x