Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் சரணடைந்த - கடலூர் எம்பி ரமேஷிடம் சிபிசிஐடி விசாரணை நடத்த திட்டம் :

கடலூர்

கொலை வழக்கில் பண்ருட்டி சார்பு நீதிமன்றத்தில் சரணடைந்த கடலூர் எம்பி ரமேஷிடம் இன்று சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த உள்ளனர்.

கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ். ரமேஷூக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை பண்ருட்டி அருகே பனிக்கன்குப்பத்தில் உள்ளது. இந்த தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த மேலமாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (55) என்பவர் கடந்த மாதம் 19-ம் தேதி மர்மமானமுறையில் உயிரிழந்தார்.பிரதேச பரிசோதனை அறிக்கையில், அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது. இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீஸார் கடந்த 8-ம் தேதி மக்களவை உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து 9-ம் தேதி அதிகாலை மக்களவை உறுப்பினர் ரமேஷின் முந்திரி தொழில்சாலையில் பணியில் இருந்த அல்லாப்பிச்சை, சுந்தர் என்கிற சுந்தர்ராஜ், கந்தவேல்,வினோத், எம்பியின் உதவியாளராக இருக்கும் நடராஜன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி ரமேஷ் பண்ருட்டி சார்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். நீதிபதி அவரை இருதினங்கள் நீதி மன்ற காவலில் வைக்க உத்தரவிட்டர். இதையடுத்து கடலூர் கிளைச் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். கடலூர் அரசு மருத்துவமனையில் ரமேஷூக்கு நடத்தப்பட்ட சோதனையில் கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று (அக்.13) அவரை கடலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத் தில் போலீஸார் ஆஜர்படுத்த இருக்கின்றனர். சிபிசிஐடி போலீஸார் அவரை தங்கள் வசம் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர். இதற்காக இன்று நீதிமன்றத்தில் அவர்கள் மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x