Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

நாம் தமிழர் கட்சியினர் மீது நடவடிக்கை கோரி - எம்எல்ஏ தலைமையில் எஸ்பியிடம் காங்கிரஸார் மனு :

தக்கலையில் நடந்த நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா,ராகுல்காந்தி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகவும், நாம் தமிழர் கட்சியினரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும் கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ்குமார் தலைமையில் காங்கிரஸார் குமரி மாவட்ட எஸ்.பி.யிடம் மனு அளித்தனர்.

ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரஸ் நிர்வாகி கள் டென்னிஸ், ஜெகன்ராஜ், ஹனுகுமார், மோகன்தாஸ் உள்ளிட்டோர் குமரி மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணனிடம் மனு அளித்தனர். அதில், கடந்த 10-ம்தேதி தக்கலையில் கல்குளம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, சாட்டை துரைமுரு கன் என்பவர் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொலை செய்தது போல் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரை கொலை செய்து விடுவோம் என்ற தொனியில் பேசினார்.

மேலும், அக்கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர், காளியம்மாள் ஆகியோரின் பேச்சும் சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும், கலவரத்தை தூண்டும் விதமாகவும் உள்ளது. எனவே, 3 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x