Published : 09 Oct 2021 03:10 AM
Last Updated : 09 Oct 2021 03:10 AM

லக்கிம்பூர் சம்பவத்தில் உ.பி. அரசின் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை : உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

லக்கிம்பூர் கெரி வன்முறை சம்பவத்தில் உத்தரபிரதேச அரசின் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என அதிருப்தி தெரிவித்தஉச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் கடந்த 3-ம் தேதிபேரணியாக சென்ற விவசாயிகள் மீது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா சென்ற கார் மோதியதாக கூறப்படுகிறது. இதில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உயிரிழந்தனர். இதையடுத்து நடந்த வன்முறையில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவான ஆசிஷ் மிஸ்ராவுக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி 2 வழக்கறிஞர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை நேற்றுமுன்தினம் விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் யார் யார், அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து வெள்ளிக்கிழமை அறிக்கை தாக்கல் செய்யஉத்தரபிரதேச அரசுக்கு உத்தரவிட்டது.

அதன்படி, இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி சூர்யகாந்த் ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தரபிரதேச அரசுசார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்த பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:

லக்கிம்பூரில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பது துரதிருஷ்டவசமானது மட்டுமின்றி மிகவும் கொடூரமானது. இதில் ஒருவிவசாயி துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்திருக்கிறார் என கூறப்படுகிறது. சம்பவம் நடந்து ஒரு வாரமாகியும் இதில் தொடர்புடைய முக்கிய நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

சாதாரண நபர்கள் சம்பந்தப்பட்ட குற்றச்சம்பவங்களிலும் உத்தரபிரதேச போலீஸார் இப்படிதான் நடந்து கொள்வார்களா, வெறும் நோட்டீஸ் ஒட்டுவதுடன் போலீஸார் தங்கள் வேலையை முடித்துக் கொள்வார்களா, இந்த வழக்கில் உத்தரபிரதேச அரசு மற்றும் காவல்துறையின் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை.

வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவில் இடம்பெற்றிருக்கும் டிஐஜி, எஸ்.பி. உட்பட அனைத்து போலீஸாரும் சம்பந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள். இதுபோன்ற ஒரு குழுவை அரசுஎப்படி அமைத்தது, நாங்கள் ஒருபொறுப்பான அரசையும், காவல்துறையையும் எதிர்பார்க்கிறோம். 8 பேர் கொல்லப்பட்ட மிக கொடூரமான சம்பவம் இது. இந்த வழக்கில் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் இதை சிபிஐயிடம் ஒப்படைக்க நேரிடும். இனியும் போலீஸார் மெத்தனமாக நடந்து கொள்ள மாட்டார்கள் என நம்புகிறோம். குற்றவாளிகளை உடனே கைது செய்து அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். இந்தவழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x