Published : 08 Oct 2021 03:11 AM
Last Updated : 08 Oct 2021 03:11 AM

உரத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : தமிழக அரசுக்கு பழனிசாமி, ராமதாஸ் கோரிக்கை

உரத் தட்டுப்பாட்டைப் போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: கடந்த 5 மாத திமுக ஆட்சியில், வேளாண் இடுபொருட்கள் முதற்கொண்டு உரங்கள் வரை உழவுப் பணிகளுக்குத் தேவையான பொருட்கள் கிடைக்காமல் விவசாயிகள் தவிக்கின்றனர். அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. முக்கியமாக விவசாயிகளுக்கு தேவைப்படும் உரம் கிடைப்பதில்லை.

விவசாயிகளுக்கு இந்த பருவத்துக்கு தேவையான குறிப்பிட்ட உரங்கள் எந்த கூட்டுறவு சங்கங்களிலும், விற்பனைக் கடைகளிலும் தேவையான அளவுஇல்லை என்று செய்திகள் வருகின்றன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே உரங்கள் முழு அளவில் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், விவசாயிகளின் கஷ்டத்தைப் போக்கவும் அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழகத்தில் யூரியா, டை அமோனியம் பாஸ்பேட் ஆகிய உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தடுப்பாடு காரணமாக உரங்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. பல இடங்களில் நுண்ணூட்டச் சத்து உரங்கள், களைக்கொல்லிகள் ஆகியவற்றை வாங்கினால்தான் இந்த இரு வகை உரங்களும் வழங்கப்படும் என்று உர வணிகர்கள் கட்டாயப்படுத்துகின்றனர்.

வேளாண்துறை அமைச்சர் தலைமையில் அதிகாரிகள் குழுவை டெல்லிக்கு அனுப்பி தமிழகத்துக்கு தேவையான உரங்களை பெற நடவடிக்கைஎடுக்க வேண்டும். வெளிச்சந்தையில் உரங்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், உரங்களுக்கான தட்டுப்பாடு தீரும்வரை யூரியா, டை அமோனியம் பாஸ்பேட் ஆகிய இரு உரங்களையும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x