Published : 05 Oct 2021 03:11 AM
Last Updated : 05 Oct 2021 03:11 AM

புதிதாக 20,799 பேருக்கு கரோனா ஒரே நாளில் 180 பேர் உயிரிழப்பு :

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. நேற்று காலை 7 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,799 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சத்து 34,702 ஆக உயர்ந்தது. கடந்த ஒரு வாரத்தில் புதிதாக 1.37 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சுமார் 7 மாதங்களுக்கு பிறகு தற்போதுதான் ஒரு வார மொத்த பாதிப்பு 2 லட்சத்துக்கும் கீழ் குறைந்திருப்பது குறிப்பிடத் தக்கது.

கரோனா தொற்று பாதிப்பால் கேரளாவில் 74, மகாராஷ்டிராவில் 41 பேர் உள்பட நாடு முழுவதும் ஒரே நாளில் 180 பேர் இறந்துள்ளனர். இதுவரை மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 48,997 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவில் இருந்து நேற்று முன்தினம் 26,718 பேர் குணமடைந்தனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 31 லட்சத்து 21,247 ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளில் 2 லட்சத்து 64,458 பேர் சிகிச்சை பெறுகின்றனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 23 லட்சத்து 46 ஆயிரத்து 176 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் செலுத்தப் பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 90 கோடியே 79 லட்சத்தை கடந்துள்ளது.

இத்தகவல்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x