Published : 02 Oct 2021 06:40 AM
Last Updated : 02 Oct 2021 06:40 AM

கடத்தப்பட்ட 5 மாத பெண் குழந்தை மீட்பு : ரூ.90 ஆயிரத்துக்கு வாங்கியவர் உட்பட மூவர் கைது

பொள்ளாச்சி அருகே கடத்தப்பட்ட 5 மாத பெண் குழந்தையை போலீஸார் மீட்டனர். குழந்தையை பணம் கொடுத்து வாங்கியவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

கர்நாடக மாநிலம் மைசூரு பகுதியை சேர்ந்த மணிகண்டன், சங்கீதா தம்பதியினர் கடந்த 27-ம் தேதி ஆனைமலை பகுதியில் உள்ள பயன்பாட்டில் இல்லாத பேருந்து நிறுத்தத்தில் தங்கி பழைய துணி வியாபாரம் செய்துவந்தனர். இவர்களது 5 மாத பெண் குழந்தை கடந்த 28-ம் தேதி கடத்தப்பட்டது. ஆனைமலை போலீஸார் தனிப்படை அமைத்து தேடிவந்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டது. இதில், அங்கலக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குழந்தை இருப்பது தெரியவந்தது. கடந்த 30-ம் தேதி போலீஸார் அங்கு சென்று குழந்தையை மீட்டனர்.

குழந்தையை கடத்திய அதே பகுதியை சேர்ந்த ராமர் (45), சேத்துமடையை சேர்ந்த முருகேஷ் (30) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அங்கலக்குறிச்சியை சேர்ந்த முத்துப்பாண்டி, கற்பகம் தம்பதியினருக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் ரூ.90,000 கொடுத்து குழந்தையை வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து, முத்துப்பாண்டி(51)யும் கைது செய்யப்பட்டார். மூவரையும் பொள்ளாச்சி நடுவர் நீதிமன்றம் 2-ல் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். குழந்தை காணாமல் போன 48மணி நேரத்தில் தனிப்படை அனைத்து துரிதமாக செயல்பட்ட ஆனைமலை போலீஸாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

டிஐஜி, எஸ்.பி. கருத்து

கோவை சரக காவல்துறை டிஐஜி முத்துசாமி மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் ஆகியோர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆனைமலையில் 5 மாத குழந்தை கடத்தப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சியில், ஒருவரிடம் பணம், நகை, செல்போன் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்த வழக்கில் 5 பேர் சம்பவம் நடந்த 12 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர்.

சொந்தக் குழந்தையாக இருந்தாலும், ஆபத்தான சூழல்களில் குழந்தைகளை ஈடுபடுத்தும் போது, குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ‘சிகரம் தொடு’ என்ற திட்டம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது. மாவட்ட காவல்துறையில் தொடங்கப்பட்ட விடியல் ஆலோசனைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x