Published : 28 Sep 2021 03:18 AM
Last Updated : 28 Sep 2021 03:18 AM

மாநிலங்களவை உறுப்பினர்களாக - திமுக சார்பில் டாக்டர் கனிமொழி, ராஜேஸ்குமார் போட்டியின்றி தேர்வு : புதுச்சேரியில் பாஜகவின் செல்வகணபதி தேர்வானார்

மாநிலங்களவை உறுப்பினர்களாக திமுக வைச் சேர்ந்த டாக்டர் கனிமொழி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல, புதுச்சேரியில் இருந்து பாஜகவின் செல்வ கணபதியும் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வானார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று எம்எல்ஏ ஆனதால் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் தங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் காலியான 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு அக்.4-ம் தேதி தேர்தல் நடக்கும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி முடிவடைந்தது. திமுக சார்பில் அக்கட்சியின் மருத்துவர் அணிச் செயலாளர் டாக்டர் கனிமொழி, நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். கடந்த 23-ம் தேதி நடந்த பரிசீலனையின்போது சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளான நேற்று மாலை, திமுக வேட்பாளர்கள் டாக்டர் கனிமொழி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரியும், சட்டப்பேரவை செயலாளருமான கி.சீனிவாசன் அறிவித்தார்.

இதற்கான சான்றிதழை தேர்தல் நடத் தும் அதிகாரியிடம் டாக்டர் கனிமொழி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோர் கி.சீனிவாசனிடம் நேற்று மாலை பெற்றுக் கொண்டனர். அப்போது சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் உடனிருந்தார்.

டாக்டர் கனிமொழி 2026 ஏப்ரல் வரையும், ராஜேஸ்குமார் 2022 ஜூன் வரையும் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகிக்க முடியும்.

மாநிலங்களவையில் ஏற்கெனவே திமுக வுக்கு திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங் கோவன், ஆர்.எஸ்.பாரதி, அந்தியூர் செல்வ ராஜ், பி.வில்சன், என்.ஆர்.இளங்கோ, மு.சண்முகம், எம்.எம்.அப்துல்லா ஆகிய 8 உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது மேலும் 2 பேர் தேர்வாகி உள்ளதால் மாநிலங்களவையில் திமுகவின் பலம் 10 ஆக உயர்ந்துள்ளது. மக்களவையில் திமுகவுக்கு 24 உறுப்பினர்கள் உள்ளனர்.

புதுச்சேரியில் செல்வகணபதி

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினராக என்ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி சார்பில் மாநில பாஜக பொருளாளர் செல்வகணபதி போட்டியின்றி தேர்வானார். இதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி முனி சாமி வழங்கினார். அவருக்கு முதல்வர் ரங்க சாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வாழ்த்து தெரிவித்தனர். புதுச்சேரியில் இருந்து முதன் முறையாக பாஜகவைச் சேர்ந்தவர் மாநிலங் களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x