Published : 26 Sep 2021 03:25 AM
Last Updated : 26 Sep 2021 03:25 AM

குடிமைப் பணி தேர்வு முடிவுகள் வெளியீடு - பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஐ.டி. பொறியாளர் முதலிடம் : தமிழகத்தில் இருந்து 36 பேர் தேர்வு

கடந்த ஆண்டு நடைபெற்ற குடிமைப் பணி தேர்வில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஐ.டி. பொறியாளர் முதலிடம் பெற்றுள்ளார். இந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து 36 பேர் தேர்வாகியுள்ளனர்.

இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி மற்றும் சேவைப் பணிகளில் சேருவதற்காக ஆண்டுதோறும் மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 2020-ம் ஆண்டு 4,82,770 பேர் தேர்வெழுதினர். இவர்களில் 10,564 பேர் மட்டுமே மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இதில் நாடு முழுவதிலும் இருந்து 761 பேர் தேர்வாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 545 ஆண்களும், 216 பெண்களும் அடங்குவர்.

இந்தக் குடிமைப் பணி தேர்வில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவரும், மும்பை ஐஐடியில் பொறியாளர் பட்டம் பெற்றவருமான ஷுபம் குமார் அகில இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர்ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டுகுடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று இந்திய பாதுகாப்பு கணக்கியல் துறையில் தேர்வானார். எனினும், ஆட்சிப் பணியில் அமர்வதற்காக கடினமாக உழைத்து கடந்த ஆண்டு நடைபெற்ற குடிமைப் பணி தேர்வில் பங்கேற்றுதற்போது முதலிடம் பிடித்திருக்கிறார்.

இதுகுறித்து ஷுபம் குமார் கூறுகையில், “தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவேன் என எதிர் பார்த்தேன். முதலிடம் பிடிப்பேன் என எதிர்பார்க்க வில்லை. மிகவும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கிறேன்’’ என்றார்.

இரண்டாம் இடத்தை மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த ஜக்ராதி அவாஸ்தி என்ற பெண் பிடித்துள்ளார். இவர் போபாலில் உள்ள மவுலானா ஆசாத் தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர். அவாஸ்தி கூறும்போது, "இதற்கு முன்பு நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் நான் தோல்வி அடைந்தேன். எனினும், மனம் தளராமல் படித்து வெற்றி பெற்றி ருக்கிறேன். மக்கள் சேவைக்காக என்னை அர்ப்பணிப்பேன்" என்றார்.

இந்த தேர்வில் அகில இந்திய அளவில் முதல் 25 இடங்களை பிடித்தவர்களில் 12 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து 36 பேர் தேர்வாகியுள்ளனர்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘குடிமைப் பணி தேர்வில் வெற்றிபெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். மக்கள் பணியில் திருப்திகரமான மற்றும் உற்சாகமான தருணங்கள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் மிக முக்கியமான காலக்கட்டத்தில் இருக்கிறீர்கள். உங்கள் பயணம் வெற்றிகரமாக அமையட்டும். அதே சமயத்தில், இந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்தடுத்த வாய்ப்புகள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன’’ என்று தெரிவித்துள்ளார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x