Published : 26 Sep 2021 03:25 AM
Last Updated : 26 Sep 2021 03:25 AM
கோவை அரசு மருத்துவமனையில் உணர்திறன் சிகிச்சை பூங்காவை பொதுப்பணித் துறை அமைச்சர் ஏ.வ.வேலு, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் நேற்று திறந்து வைத்து பயனாளிகளுக்கு காதொலி கருவிகளை வழங்கினர். இந்த நிகழ்வில் அமைச்சர் ஏ.வ.வேலு பேசியதாவது: தமிழகத்திலேயே சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அடுத்தபடியாக, கோவை அரசு மருத்துவமனையில்தான் 225 குழந்தைகளுக்கு இதுவரை காக்ளியர் இம்பிளான்ட் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சையை வெளியில் செய்தால் ரூ.10 லட்சம் வரை செலவாகும். ஆனால்,அரசு மருத்துவமனையில் இது முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் இலவசமாக செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சை மட்டுமின்றி, அதற்குப் பிறகு குறைந்தபட்சம் ஓராண்டோ, இரண்டு ஆண்டுகளோ அவர்களுக்கு செவித்திறன் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களை நன்றாக பேச வைப்பதற்காக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல மற்ற காரணங்களுக்காக காது கேட்காமல் இருப்பவர்களுக்காக வேண்டி, காதொலி கருவியும் முதல்வரின் காப்பீட்டுத்திட்டத்தின்கீழ் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. காதுகேளாமையை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்துவிட்டால் அதற்கான உரிய சிகிச்சை அளித்து அவர்களை முற்றிலும் குணப்படுத்தி காதுகேட்க வைக்க முடியும். எனவே, பெற்றோர் குழந்தைகளுக்கு அல்லது பெரியவர்களுக்கு காதுகேளாமை இருந்தாலோ அல்லது சந்தேகம் ஏற்பட்டாலும் உடனடியாக கோவை அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை பிரிவுக்கு வந்து செவித்திறனை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா, மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT