Published : 25 Sep 2021 03:32 AM
Last Updated : 25 Sep 2021 03:32 AM

உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்தக் கோரி வழக்கு - அதிமுகவுக்கு உரிய விளக்கம் அளிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு :

உள்ளாட்சித் தேர்தலை நியாயமாக, நேர்மையாக நடத்தக்கோரி அதிமுக தொடர்ந்த வழக்கில் செப்.29-க்குள் அதிமுகவுக்கு உரிய விளக்கம் அளிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டங்களாக நடத்தஎதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் இன்பதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், சட்டப்பேரவைத் தேர்தல் ஒரேகட்டமாக நடத்தப்பட்ட நிலையில், 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை அக்.6 மற்றும் அக்.9 என இரு கட்டங்களாக நடத்துவது தேவையற்றது. அவ்வாறு நடத்தினால் நேர்மையாகவும், ஜனநாயக ரீதியாகவும் நடக்காது. கடந்த 2006 திமுக ஆட்சி காலத்தில் நடந்தது போல மீண்டும் வன்முறை நடக்க வாய்ப்பு உள்ளது.

எனவே, வெளி மாநில பார்வையாளர்களை நியமிக்கவும் மத்தியரிசர்வ் போலீஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கடந்த செப்.14-ம் தேதி தேர்தல் ஆணையத்தில் மனுகொடுத்துள்ளார். அதை பரிசீலித்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிஇருந்தார்.

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அமர்வில் இந்த வழக்குநேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில்மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ‘‘இத்தேர்தல்நியாயமாக, வெளிப்படையாக, ஜனநாயக ரீதியாக நடக்க வேண்டுமானால் வெளி மாநில தேர்தல் பார்வையாளர்களை நியமிக்க வேண்டும். மத்திய ரிசர்வ் போலீஸாரை பணியமர்த்த வேண்டும். தேர்தலை முழுமையாக சிசிடிவி கேமரா மூலமாகவும், வீடியோ பதிவு மூலமாகவும் பதிவு செய்ய வேண்டும்’’ என்றார்.

மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, ‘‘9 மாவட்டங்களிலும் உள்ள 14,900 வாக்குச் சாவடிகளுக்கு போதுமான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 3 அடுக்குபோலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. தேர்தலை நியாயமாக நடத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘இத்தேர்தலை நியாயமாக, நேர்மையாக நடத்துவது அவசியம். மாநிலத்தின் பிரதான கட்சி என்றமுறையில் அதிமுக தந்த மனுவைபரிசீலித்து, என்ன நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்துமனுதாரருக்கு செப்.29-க்குள்மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை செப்.30-ம்தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x