Published : 25 Sep 2021 03:33 AM
Last Updated : 25 Sep 2021 03:33 AM
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை நடைபெற்றது. இதில், 450 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். ரவுடிகளுக்கு எதிரான இதுபோன்ற கடுமையான நடவடிக்கை தொடரும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் அண்மை காலமாக குற்றச்செயல்கள் அதிகரிக்கத் தொடங்கியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றைவெளியிட்டிருந்தார். அதில், ‘10 நாட்களாக ஆங்காங்கே கொலை குற்றங்கள் நிகழ்ந்து வருவது வேதனை அளிக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் முதல்வர் தனிக்கவனம் செலுத்த வேண்டும்’ என வலியுறுத்தி இருந்தார்.
இதேபோல் நெல்லை மாவட்டத்திலும் இரு சாதியினரிடையே ஏற்பட்ட பகையில் அடுத்தடுத்து இருவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டனர். மேலும், திண்டுக்கல்லில் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து கொலை உட்பட அனைத்து வகையான குற்ற செயல்களையும் முற்றிலும் தடுக்கும் வகையில் 48 மணிநேரம் ரவுடிகள் வேட்டையில் அனைத்து மாவட்ட போலீஸாரும் நேற்று முன்தினம் முதல் ஈடுபட்டனர். பழைய குற்றவாளிகள், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருப்பவர்கள், கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்ளிட்ட ரவுடிகளை கைது செய்ய போலீஸ் உயர் அதிகாரிகள் களம் இறங்கினர்.
கிராமப்புறங்கள் முதல் நகரப்பகுதிகள் வரை அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினர். தலைமறைவு ரவுடிகளின் வீடுகள், அவர்கள் தஞ்சம் புகுந்திருந்த இடங்கள் ஆகியவற்றில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 450 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் 716 ரவுடிகள் மற்றும் பழைய குற்றவாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில், கொலை வழக்கில் தொடர்புடைய 57 பேர், இதர குற்றவழக்குகளில் தொடர்புடைய 13 பேர் என மொத்தம் 70 பழைய குற்றவாளிகள் மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து அரிவாள், கத்தி என 20 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் நேற்று இரவு (நேற்று முன்தினம்) முதல் முற்றுகைச் செயல்பாடு (Storming Operation) ஒரேநேரத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 870 பழைய குற்றவாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் மொத்தம் 450 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 181 பேர் நிலுவையில் உள்ளநீதிமன்ற வழக்குகளில் பிடியாணையின்படி கைதானார்கள். இவர்களிடமிருந்து 3 நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் 250 கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் 420 நபர்களிடமிருந்து நன்னடத்தைக்காக பிணை ஆணை பெறப்பட்டுள்ளது. கொலை குற்றங்களில் ஈடுபடுகின்ற ரவுடிகளுக்கு எதிரான காவல்துறையின் இந்த கடுமையான நடவடிக்கை தொடரும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழக காவல் துறையின் இந்த திடீர் நடவடிக்கை காரணமாக சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களில் உள்ள ரவுடிகள் கலக்கமடைந்துள்னர். காவல் துறைக்கு பயந்து தலைமறைவாக உள்ள ரவுடிகளும் காவல் நிலையத்தில் சரணடைய முடிவு செய்துள்ளனர். அவர்களை சிறையில் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT