Published : 24 Sep 2021 03:21 AM
Last Updated : 24 Sep 2021 03:21 AM
‘‘நாடு முழுவதும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 80.13 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக வழங்கி உள்ளது’’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்த பிறகு, தடுப்பூசி பெறுவதில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டன. அதன்பிறகு கடந்த ஜூன் 21-ம் தேதி முதல் மத்திய அரசே தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று கூறியதாவது:
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 80 கோடியே 13 லட்சத்து 26,335 தடுப்பூசி டோஸ்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 4 கோடியே 52 லட்சத்து 7,660 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் மாநிலங்கள், யூனியன் பிரதேசங் கள் கையிருப்பில் வைத்துள்ளன. மேலும, 48 லட்சம் டோஸ்கள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
தினசரி பாதிப்பு
எனினும், இந்தியாவில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 1,640 ஆக குறைந்துள்ளது ஆறுதல் அளிக்கிறது. இது கடந்த 187 நாட்களில் மிகமிக குறைவான எண்ணிக்கையாகும். மேலும், மொத்த பாதிப்பில் ஒரு சதவீதத்துக்கும் குறைவு. கடந்த 24 மணி நேரத்தில் 31,990 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 28 லட்சத்து 15,731 ஆக அதிகரித்துள்ளது. தினசரி பாசிட்டிவ் 2.09 சதவீதமாக உள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 55.83 கோடி பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 16-ம் தேதியில் இருந்து இதுவரை 83.39 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
66% பெரியவர்களுக்கு தடுப்பூசி
மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் மூன்றில் 2 பங்கு பெரியவர்கள் ஒரு டோஸ் தடுப்பூசியையாவது போட்டுக் கொண்டுள்ளனர். அதேநேரத்தில் 23 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுள்ளனர். தடுப்பூசி போடுவதில் சில மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளோம்.
லட்சத் தீவு, சண்டிகர், கோவா,இமாச்சல், அந்தமான் நிகோபர் தீவுகள், சிக்கிம் நிர்வாகங்கள், அங்குள்ள அனைத்து பெரியவர்களுக்கும் ஒரு டோஸ் தடுப்பூசியையாவது செலுத்தி உள்ளன. தாத்ராமற்றும் நாகர் ஹவேலி, கேரளா, லடாக், உத்தராகண்ட் ஆகிய பகுதிகளில் 90 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
நாடு முழுவதும் 99 சதவீத சுகாதாரப் பணியாளர்கள் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். அவர்களில் 84 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசி களையும் போட்டுள்ளனர். கரோனா 2-வது அலை குறைந்து வருகிறது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இவ்வாறு சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் கூறினார்.-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT