Published : 22 Sep 2021 03:04 AM
Last Updated : 22 Sep 2021 03:04 AM
கிராமப்பகுதிகளில் நிலமற்ற, வீடுகள் இல்லாத ஏழை மக்களுக்கு நிலம் மற்றும் வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்த சிறப்பு பணிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குடிசைகளே இல்லாத தமிழகம் உருவாக வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கமாகும். 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற இலக்கை அடையும்பொருட்டு, ஊரகப் பகுதிகளில் வாழும் வீடு இல்லாத, குடிசை வீடுகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு தேவையான நிலையான வீடு கட்டிக் கொடுப்பதே பிரதம மந்திரி குடியிருப்பு (ஊரகம்) திட்டத்தின் குறிக்கோளாகும்.
இத்திட்டத்தின் பயனாளிகள், 2011- ன் சமூக பொருளாதார கணக்கெடுப்பின் நிரந்தர காத்திருப்போர் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இத்திட்டம் நிலமற்றோருக்கு முன்னுரிமை அளித்தபோதிலும், நிலமற்ற பயனாளிகள் இத்திட்டத்தின் மூலம் வீடுகள் பெற இயலாத நிலை உள்ளது. மேலும், பிரதம மந்திரி குடியிருப்பு ( ஊரகம்) திட்டத்தை விரைவுபடுத்தி, வீடுகள் கட்டும் பணியை துரிதப்படுத்த இயலவில்லை.
எனவே, நிலமற்ற பயனாளிகளுக்கு நிலம் வழங்கி, வீடுகள் கட்டும் பணியை துரிதப்படுத்த, வருவாய்த் துறை செயலர் மற்றும் பிரதமரின் குடியிருப்பு (ஊரகம்) திட்டத்தை செயல்படுத்தும் செயலரை கொண்ட சிறப்பு பணிப்பிரிவு அமைக்க மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதன் அடிப்படையில், இத்திட்டத்தின் செயலாக்கத்தை விரைவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 2011-ன் சமூக பொருளாதார கணக்கெடு்ப்பின் நிரந்தர காத்திருப்போர் பட்டியலிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நிலமற்ற பயனாளிகளுக்கு, விரைவில் நிலம் ஒதுக்கீடு செய்யும் வகையில், அரசு சார்பில் வருவாய்த் துறை செயலரை தலைவராகவும், ஊரக வளர்ச்சித் துறை செயலரை துணைத் தலைவராகவும், நில நிர்வாக ஆணையரை உறுப்பினராகவும், ஊரக வளர்ச்சித் துறை இயக்குநரை உறுப்பினர் செயலராகவும் கொண்ட சிறப்பு பணிப்பிரிவு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT