Published : 22 Sep 2021 03:05 AM
Last Updated : 22 Sep 2021 03:05 AM

அடையாறு பிரம்மஞான சபை வளாகத்தில் - நடைப்பயிற்சிக்கு சென்ற முதல்வர் பொதுமக்களுடன் உரையாடல் :

சென்னை அடையாறு பிரம்மஞான சபை வளாகத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு வந்திருந்த பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சென்னை கடற்கரை சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் வரை அடிக்கடி சைக்கிள் பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார்.

நடைப்பயிற்சியின்போது இளைஞர்கள், பெண்கள், பொதுமக்களை சந்தித்து உரையாடுவதையும் அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் சென்னை அடையாறில் உள்ள பிரம்மஞான சபை வளாகத்தில் நேற்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி கொண்டார். அங்கு காலையில் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். முதல்வர் ஸ்டாலினைக் கண்டதும் பொதுமக்கள் பலரும் அவருக்கு வணக்கம் தெரிவித்தனர். பதில் வணக்கம் தெரிவித்த ஸ்டாலின், அவர்களுடன் சகஜமாக உரையாடினார்.

அப்போது கடந்த 4 மாத கால திமுக ஆட்சியின் செயல்பாடுகள் நன்றாக இருப்பதாக பலர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தனர். ஸ்டாலினிடம் பேசிய பெண்கள் சிலர், ``உங்களது பேரன் இன்பநிதி கால்பந்து போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்'' என்றனர். அவர்களுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

68 வயதிலும் இளமையாக இருப்பதன் ரகசியம் என்ன என்று சிலர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்கிறேன். உணவுக் கட்டுப்பாட்டையும் பின்பற்றுகிறேன். அதுதான் ரகசியம். வேறொன்றும் இல்லை” என்றார். ஸ்டாலினுடன் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் நடைபயிற்சி மேற்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x