Published : 21 Sep 2021 03:18 AM
Last Updated : 21 Sep 2021 03:18 AM

அதிமுகவில் புதிய பதவிகள் உருவாக்கியதை - தேர்தல் ஆணையம் ஏற்றதில் தவறில்லை : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி நிறைவேற்றிய தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதில் எந்த தவறும் இல்லை. சட்டவிரோதமும் இல்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூரை சேர்ந்த அதிமுக உறுப்பினரும், வழக்கறிஞருமான ராம்குமார் ஆதித்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறி யிருந்ததாவது:

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கடந்த 2017 செப்டம்பர் 12-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், பொதுச் செயலாளர் பதவியை கலைத்துவிட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என புதிதாக 2 பதவிகள் உருவாக்கப்பட்டன. பொதுச் செயலாளருக்கான அதிகாரங்களை இவர்களுக்கு வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழுவுக்கு அதிகாரமில்லை

அதிமுக கட்சி விதிகளின்படி,இவ்வாறு புதிய பதவிகளை உருவாக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை. மேலும், அதிமுக பொதுச் செயலாளருக்கான அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர்களுக்கு அளித்து பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது சட்டவிரோதம். எனவே, இதுதொடர்பாக அதிமுக கட்சி விதிகளில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள், தீர்மானங்களை ஏற்று தேர்தல் ஆணையம் கடந்த 2018 மே 4-ம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கோரியிருந் தார்.

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதில் எந்தத் தவறும் இல்லை. சட்ட விரோதமும் இல்லை.இதில் உள்கட்சி விதிகள் பின்பற்றப்பட்டதா, இல்லையா என்பதை தேர்தல் ஆணையம் ஆராய முடியாது. உள்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக உரிமையியல் வழக்கு மட்டுமே தொடர முடியும்’ என்று கூறி, வழக்கை முடித்துவைத்து உத்தர விட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x