Published : 18 Sep 2021 03:12 AM
Last Updated : 18 Sep 2021 03:12 AM

ஐந்துகாணி - உய்யாலிகுப்பம் சாலையை சீரமைக்க கோரிக்கை :

வாயலூர் கிராமத்தில் குடியிருப்போர் மற்றும் இருளர் மக்கள்பிரதான சாலையாகப் பயன்படுத்தும், ஐந்துகாணி - உய்யாலிகுப்பம் இடையே அமைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள், இருளர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் வாயலூர் ஊராட்சியில் காரைத்திட்டு, ஐந்துகாணி, வாயலூர், உய்யாலிகுப்பம் உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன.

இந்நிலையில், ஐந்துகாணி - உய்யாலிகுப்பம் இடையே அமைந்துள்ள 350 மீட்டர் சாலையை கிராம மக்கள், நகரப்பகுதிக்கு செல்லும் பிரதான சாலையாகப் பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலை கடந்த 2015-ம்ஆண்டு பெய்த கனமழையில் சேதமடைந்தது. ஆனால், வட்டாரவளர்ச்சி நிர்வாகம் நிதிப் பற்றாக்குறை எனக்கூறி, சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தச் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து, வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் பயன்படுத்த முடியாத நிலையில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், இந்தச்சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள், இருளர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, அப்பகுதி இருளர்மக்கள் கூறியதாவது: வாயலூர்ஊராட்சி மக்கள், பல்வேறு தேவைகளுக்காக நகரப்பகுதிக்கு செல்ல இந்தச் சாலை பிரதானமாக விளங்கி வருகிறது.

மேலும், பள்ளி மாணவர்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். வாயலூரிலிருந்து புதுப்பட்டினத்துக்கு, ஈசிஆர் சாலை வழியாகச் செல்ல முடியும். ஆனால், விபத்து அச்சம் காரணமாக கிராம மக்கள் இச்சாலையை கட்டாயம் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. தற்போதுமழைக்காலம் தொடங்கியுள்ளதால் மழைநீர் தேங்கி மிகவும் சிரமபட்டு வருகிறோம் என்றனர்.

இதுகுறித்து, திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர்உமா கூறியதாவது: சேதமடைந்துள்ளதாக கூறப்படும் இந்தச் சாலையை சீரமைக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x