Published : 17 Sep 2021 03:12 AM
Last Updated : 17 Sep 2021 03:12 AM

அனுமதியின்றி விளம்பரப் பலகை வைப்போர் மீது நடவடிக்கை :

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பரப் பலகைகள், பதாகைகள் வைப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அனுமதி பெறாமல் நிறுவப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் மற்றும் பதாகைகளை அகற்றுவதற்கு அரசு தெரிவித்துள்ளதை தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதி பெறாமல் நிறுவப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை கண்டறிந்து அவற்றை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விளம்பரப் பலகைகள் தமிழ்நாடு ஊராட்சி விதிகளின் படி உரிய வழிமுறைகளை கடைபிடித்து, மாவட்ட ஆட்சியரின் அனுமதிபெற்று குறிப்பிடப்பட்ட அளவுகளின்படி பாதுகாப்பாக நிறுவப்பட வேண்டும். ஆனால் சட்டத்துக்கு புறம்பாக உரிய வழிமுறைகளை கடைபிடிக்காமல் நிறுவப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் மக்களின் கவனத்தை திசைதிருப்பி பாதசாரிகளுக்கும், போக்குவரத்துக்கும் பெரும் இடையூறை ஏற்படுத்துகிறது. இதனால், மக்களின் உயிருக்கு ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.

எனவே, புதிய விளம்பரப் பலகைகளோ, விளம்பரப் பதாகைகளோ மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்ற பின்னரே வைக்கவேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் மற்றும் விளம்பரப் பதாகைகள் அகற்றப்படுவதோடு அதன் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x