Published : 15 Sep 2021 03:11 AM
Last Updated : 15 Sep 2021 03:11 AM

ஆயுஷ் மருத்துவர்கள் நியமனத்துக்கு எதிராக வழக்கு : சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் 104 ஆயுஷ் மருத்துவ அலுவலர்கள் நியமனத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கில் சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த மைவிழி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: சித்த மருந்தகம் நடத்தி வருகிறேன். 18 ஆண்டுகளாக சித்த மருத்துவராக பயிற்சி பெற்று வருகிறேன். வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்துள்ளேன். கடந்தாண்டு அவுட்சோர்சிங் முறையில் 104 ஆயுஷ் மருத்துவ ஆலோசகர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கு எதிரான வழக்கில் தற்போதைய நிலை தொடர நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தனியார் ஏஜென்சியுடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் தனியார் ஏஜென்சி மூலமாக தேர்வு செய்யப்பட்ட 104 ஆயுஷ் மருத்து ஆலோசகர்கள் பணியை தொடர அனுமதி வழங்கி பிப். 25-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நான் 18 ஆண்டுகளாக சித்த மருத்துவராக பயிற்சி பெற்றிருக்கும் நிலையில் பணி அனுபவம் இல்லாதவர்கள் மருத்துவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே தனியார் ஏஜென்சி மூலமாக தேர்வு செய்யப்பட்ட 104 ஆயுஷ் மருத்துவ ஆலோசகர்கள் பணியை தொடர அனுமதிக்கும் அரசாணைக்கு தடை விதித்தும், இடஒதுக்கீடு, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்களை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி கிருஷ்ணகுமார் விசாரித்து, மனு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலர், இந்திய மருத்துவத்துறை இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x