Published : 14 Sep 2021 03:13 AM
Last Updated : 14 Sep 2021 03:13 AM

குஜராத் முதல்வரானார் பூபேந்திர படேல் : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு

குஜராத்தின் முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்றார்.

பாஜக ஆட்சி நடைபெறும் குஜராத்தில் முதல்வராக இருந்த விஜய் ரூபானியின் செயல் பாடுகள், கரோனா 2-வது அலையை அவர் கையாண்ட விதம் குறித்து பாஜக மேலிடம் அதிருப்தி அடைந்ததாக தகவல்கள் வெளி யானது. இதையடுத்து, கடந்த சனிக்கிழமையன்று முதல்வர் பதவியை விஜய் ரூபானி ராஜினாமா செய்தார். ஞாயிற்றுக்கிழமை நடந்த பாஜக எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக பூபேந்திர படேல் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, காந்திநகரில் ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆச்சார்ய தேவ் விரத் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மற்றும் பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர். பூபேந்திர படேலுக்கு அமித் ஷாவும் பாஜக தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

1962-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி பிறந்த பூபேந்திர படேல், கடந்த 2017-ம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். கட்லோடியா தொகுதியில் போட்டியிட்டு 1.17 லட்சம் வாக்குகளை பெற்றார்.

சிவில் இன்ஜினியரிங் படிப்பில் டிப்ளமா பட்டம் பெற்றுள்ள பூபேந்திர படேல், முன்னாள்முதல்வரும் உ.பி. ஆளுநருமான ஆனந்தி பென்னின் தீவிர ஆதரவாளர். சிறு வயது முதலேஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடையவர். குஜராத்தில் படேல் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.

அடுத்த ஆண்டு குஜராத் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், படேல் சமூகத்தைச் சேர்ந்த பூபேந்திர படேல் புதிய முதல்வராகி யிருப்பது பாஜகவுக்கு மேலும் பலம் சேர்க்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x