Published : 10 Sep 2021 05:59 AM
Last Updated : 10 Sep 2021 05:59 AM

மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வசதியாக - நந்திமங்கலம் ஓடையின் குறுக்கே புதிதாக தரைப்பாலம் : மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

நந்திமங்கலம் ஏரியில் இருந்து வெளியேறும் அதிகளவு உபரி நீரால் ஓடையை கடந்து செல்ல பள்ளி மாணவ, மாணவிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே, ஓடையின் குறுக்கே தரைப்பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகேயுள்ள நந்தி மங்கலம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கட்டாரிக்குப்பம் வழியாக மிதிவண்டி மற்றும் நடந்து சென்று கொடைக்கல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். நந்திமங்கலம் கிராமத்தில் இருந்து கட்டாரிக் குப்பம் செல்லும் வழியில் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறும் 2 ஓடைகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது.

மழைக்காலங்களில் ஓடை களில் உபரிநீர் வெளியேறும்போது பொதுமக்கள் செல்வதில் சிரமம் இருந்து வருகிறது. எனவே, ஓடை களின் குறுக்கே தரைப்பாலம் கட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், இதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப் படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கிடையில், ஆந்திர மாநிலத்தில் பெய்த கனமழையால் பொன்னை ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பொன்னை தடுப்பணையில் இருந்து இரண்டு கால்வாய்கள் வழியாக உபரிநீர் ஏரிகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏரிகள் நிரம்பி வருகின்றன. இதில், பெருங்காஞ்சி ஏரி நிரம்பிய தால் அங்கிருந்து வெளியேறும் உபரிநீரால் நந்திமங்கலம் ஏரியும் சில நாட்களுக்கு முன்பு நிரம்பியது.

இதனால், நந்திமங்கலம் ஏரியில் இருந்து ஓடைகள் வழியாக போளிப்பாக்கம் ஏரிக்கு உபரி நீர் திருப்பி விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஓடையில் அதிகளவு தண்ணீர் செல்வதால் கொடைக்கல் அரசுப் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் சிரமத் துக்கு உள்ளாகியுள்ளனர். ஓடையில் அதிகளவில் நீர் செல்வதால் வருவாய்த்துறை சார்பில் தடுப்புகளை ஏற்படுத்தி எச்சரிக்கை பேனரையும் கட்டியுள்ளனர்.

ஆனால், மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்பதால் புத்தகப் பையை தலையில் சுமந்தபடி அச்சத்துடன் ஓடையை தினசரி கடந்து செல் கின்றனர். எனவே, இந்த ஆண் டாவது தரைப்பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x