Published : 09 Sep 2021 03:13 AM
Last Updated : 09 Sep 2021 03:13 AM

மேற்படிப்பு, பி.எச்டி. பட்டங்களுக்கு மதிப்பில்லை : ஆப்கன் கல்வி அமைச்சர் ஷேக் மொல்வி நூருல்லா கருத்து

உயர்கல்வி மேற்படிப்பு மற்றும் முனைவர் படிப்புகளுக்கு இப்போது மதிப்பு இல்லை என்று அந்நாட்டின் புதிய கல்வி அமைச்சர் ஷேக் மொல்வி நூருல்லா முனீர் கூறினார்.

அமெரிக்க படைகளின் வெளியேற்ற அறிவிப்பை அடுத்து, அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களை தன்வசம் கொண்டு வந்த தலிபான்கள், இறுதியாக கடந்த மாதம்15-ம் தேதி தலைநகர் காபூலையும் கைப்பற்றினர். இதன் தொடர்ச்சியாக, ஆப்கானிஸ்தான் புதிய பிரதமராக முல்லா ஹசன் அகுண்ட் அறிவிக்கப்பட்டார். துணைப் பிரதமராக முல்லா பராதர் அறிவிக்கப்பட்டார். அவர்களுடன் 33 பேர் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டனர். இதற்கு முன்பு தலிபான் ஆட்சிக்காலத்தில் கல்விக்கும், பெண்ணுரிமைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இதனை சுட்டிக்காட்டிய தலிபான்கள், தற்போது அதுபோன்ற சூழல்அமையாது என உறுதியளித்திருந்தனர். ஆனால், தலிபான் அரசு அமைந்த மறு நாளிலேயே கல்வியை புறக்கணிக்கும் விதமாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் கல்வி அமைச்சர் ஷேக் மொல்வி நூருல்லா முனீர் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “ நாம் மிகவும் மதிக்கும் மத குருக்களும் (முல்லாக்கள்), தலிபான் தலைவர்களும் பள்ளிப் படிப்பைக் கூட முடிக்கவில்லை. ஆனால், இன்று அவர்கள் ஒரு நாட்டையே ஆளும் அளவுக்கு வல்லமை பெற்றிருக்கிறார்கள். அனைவரையும் விட சிறந்தவர்களாக இருக்கிறார்கள். ஏட்டுக்கல்விக்கு ஓரளவு முக்கியத்துவம் கொடுத்தால் போதுமானது. உயர்கல்வி மேற்படிப்பு மற்றும் பி.எச்டி. பட்டங்களுக்கு இப்போது மதிப்பு இல்லை" என்றார்.

தலிபான் ஆட்சி உறுதியானதில் இருந்தே, ஆப்கானிஸ்தானில் கல்வி நிலையங்களில் மாணவர்களின் வருகை மிகவும் குறைந்துகாணப்படுகிறது. குறிப்பாக, மாணவிகள் கல்வி நிலையங்களுக்கு செல்ல அஞ்சுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x