Published : 04 Aug 2021 03:20 AM
Last Updated : 04 Aug 2021 03:20 AM
‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலர் குமார்ஜெய்ந்த் உத்தரவிட்டார்.
கோவை மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், குமார்ஜெயந்த் தலைமையில் கோவையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், குமார் ஜெயந்த் பேசும்போது, ‘‘மாவட்டத்தில் பட்டா மாறுதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நில மாற்றம், நில குத்தகை ஆகியவை தொடர்பாக நிலுவையில் உள்ள கோப்புகள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் தகுதியுடைய மனுதாரர்களுக்கு விரைவாக, நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மீதமுள்ள மனுதாரர்களுக்கு கள ஆய்வு மேற்கொண்டு, மனுக்களின் மீது விரைந்து தீர்வு காண வேண்டும். சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த உதவித்தொகைகள், தகுதியான பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், வருவாய் கோட்டாட்சியர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT