Published : 04 Aug 2021 03:23 AM
Last Updated : 04 Aug 2021 03:23 AM

அமிர்தி மிருக காட்சி சாலை, பூங்காக்கள் மூடல் :

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கரோனா மூன்றாம் அலை பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வேலூர் கோட்டை பூங்கா, அமிர்தி மிருக காட்சி சாலை, மாநகராட்சி, நகராட்சி பூங்காக்கள் அனைத்தும் பொது மக்கள் நலன் கருதி மறு உத்தரவு வரும் வரை மூடப்படுகிறது. அரசு வழிகாட்டுதல் படி பேருந்துகளில் 50 சதவீதம் பயணிகள் மட்டும் பயணிக்க வேண்டும்.

உணவு விடுதிகளில் 50 சதவீதம் பொதுமக்கள் மட்டும் உணவருந்த அனுமதிக்க வேண்டும். விதிமுறை மீறும் உணவக உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் கடைகள், பல சரக்கு கடைகள், ஷோரூம்கள், ஜவுளி கடைகள் மற்றும் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், பேருந்து நிலையம், உழவர் சந்தை, காய்கறி சந்தை களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். தடையை மீறினால் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x