Published : 02 Aug 2021 03:15 AM
Last Updated : 02 Aug 2021 03:15 AM

பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர்கள் மனு - உச்ச நீதிமன்றத்தில் வரும் 5-ம் தேதி விசாரணை : தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரிக்கிறது

பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக சுதந்திரமான நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மூத்த பத்திரிகையாளர் என். ராம் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் வரும் 5-ம் தேதி விசாரணை நடத்தவுள்ளது.

இஸ்ரேலின் பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி 50-க்கும்மேற்பட்ட நாடுகளில் எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் செல்போன் உளவு பார்க்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்தியாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர், இரு மத்திய அமைச்சர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனிடையே, இந்த விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்றத்தில் கடந்த இரண்டு வாரங்களாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன.

இந்நிலையில், பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர்களான என். ராம், சஷி குமார் ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

ராணுவ உளவு மென்பொருளை பயன்படுத்தி குடிமக்களை உளவு பார்ப்பது என்பது அவர்களின் அடிப்படை உரிமைகளை தகர்க்கும் செயலாகும். மேலும், இந்த செயலை நமது ஜனநாயகத்தின் முக்கிய தூண்களாக செயல்படும் துறைகள் மீது தொடுக்கப்பட்ட அப்பட்டமான தாக்குதலாகவே கருத முடிகிறது.

இந்த உளவு விவகாரமானது கருத்து சுதந்திரத்திற்கும், தனியுரிமைக்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது. இவ்வாறு உளவு பார்ப்பது என்பது சட்டவிரோதமானது மட்டுமின்றி உளவு பார்ப்பதை அங்கீகரிக்கும் சட்டப் பிரிவையே மீறும் வகையில் உள்ளது. ஏனெனில், இந்த உளவு விவகாரத்தில் குடிமக்கள் இரையாகியுள்ளனர்.

இந்த விஷயத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும். பெகாசஸ் மூலம் நடந்த உளவு நடைமுறை, தங்கள் அனுமதியுடன் தான் நடந்ததா என்பதை மத்திய அரசு கூற வேண்டும். இதில் இதுவரை நேரடியான பதிலை அரசு தரப்பு தெரிவிக்கவில்லை.

எனவே, இந்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற அல்லது பணியில் இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கோரியிருந்தனர்.

இந்த மனுவை கடந்த 30-ம்தேதி மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தாக்கல் செய்தார். அப்போது, "இது தேசப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் இந்த மனுவை அவசர வழக்காக கருதி, உடனடியாக விசாரிக்க வேண்டும்" என அவர் கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதிஎன்.வி. ரமணா, அடுத்த வாரம் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதி சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு வரும் 5-ம் தேதி விசாரணைக்கு வரும் என அறிவிக் கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x