Published : 31 Jul 2021 03:14 AM
Last Updated : 31 Jul 2021 03:14 AM
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம் காயார் கிராமத்தில் 28 குடும்பங்களைச் சேர்ந்தஇருளர் மக்கள், குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர்.
தாங்கள் வசிக்கும் குடிசைகள் அமைந்துள்ள நிலத்துக்கு பட்டா இல்லாததால் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெறமுடியாமல் உள்ளதாகவும், அதனால், தங்களுக்கு பட்டா சான்று வழங்க வேண்டும் எனவும் திருப்போரூர் தொகுதி எம்எல்ஏவிடம் அவர்கள் கோரிக்கை மனு வழங்கினர்.
எனவே, திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி காயாரில் இருளர்குடியிருப்பு பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, குடிசைகள் அமைந்துள்ள நிலப்பகுதி வருவாய்த் துறை ஆவணங்களில் நீர்நிலை என இருப்பது தெரிந்தது.
இதையடுத்து, அதே கிராமப் பகுதியில் மாற்று இடத்தில் பட்டாநிலம் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எம்எல்ஏ உறுதியளித்தார். பட்டிபுலம், நெம்மேலி ஆகிய பகுதிகளில் வசிக்கும் இருளர் மக்களுக்கு பட்டா சான்றிதழ் மற்றும் குடியிருப்புக்கு செல்வதற்கான பாதை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT