Published : 30 Jul 2021 03:14 AM
Last Updated : 30 Jul 2021 03:14 AM
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்அருகே கீழடி அகழாய்வில் வெள்ளிக் காசு கண்டெடுக்கப்பட்டது.
திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பிப்.13-ம் தேதி முதல் 7-ம்கட்ட அகழாய்வு நடைபெறுகிறது. இதுவரை 850-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
2-ம் நூற்றாண்டு
கீழடியில் இதுவரை மண் பானை, காதில் அணியும் தங்க வளையம், பகடை, நெசவுத் தொழிலில் பயன்படும் தக்களி, கற்கோடாரி, கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள், மண் குவளைகள், சங்கு வளையல்கள், சுடுமண் மற்றும் கண்ணாடி பாசிகள், சூதுபவளம் படிகம், எடைக் கற்கள், அரிவாள், ஆணி, சிறிய செப்பு மோதிரம், வெள்ளிக் காசு, உறை கிணறுகள், பெண்கள் அணியும் சுடுமண் காதணி போன்றவை கண்டறிப்பட்டன. இந்நிலையில் வெள்ளிக் காசு கிடைத்துள்ளது. இது 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என தெரிய வருகிறது.
இதுகுறித்து மதுரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: தற்போது கீழடியில் 14 சென்டி மீட்டருக்கு கீழே வெள்ளியிலான முத்திரை காசு கிடைத்துள்ளது. அது கி.மு. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என அறியப்பட்டுள்ளது. இது அப்போதைய நாணயப் பரிமாற்றம் நடைபெற்றதற்கு சான்றாக உள்ளது. இவ்வளவு சான்று கிடைத்தும் இதை ஏற்க சிலருக்கு மனம் வரவில்லை, தமிழின் பெருமை, தொன்மை உலகளாவிய அளவுக்கு வருவதில் சிலருக்கு வயிறு எரிகிறது.
திருமங்கலம், கல்லுப்பட்டி பகுதிகளில் அதிக அளவில் காணப்படும் பழங்கால தொல்லியல் பொருட்கள் ஆய்வு தொடர முயற்சி செய்வோம். சிந்து சமவெளி நாகரிகத்தை போன்று தொன்மையான நாகரிகங்கள் நமது பகுதிகளிலும் அதிகம் உள்ளன. முதல்வரின் அனுமதியோடுதொல்லியல் துறை உதவியுடன் இவற்றை ஆராய்வோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT