Published : 30 Jul 2021 03:15 AM
Last Updated : 30 Jul 2021 03:15 AM

ஓபிசி 27 சதவீத இட ஒதுக்கீடு தமிழகத்துக்கு கிடைத்த வெற்றி : 50 % அடையும் வரை போராட்டம் - முதல்வர்

இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு தமிழகத்துக்கு கிடைத்த வெற்றிஎன்று குறிப்பிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை பெற அரசு தொடர் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசுப்பள்ளிகளிலும் கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று திமுக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள் அமலுக்கு வந்து கால் நூற்றாண்டு ஆனபின்னரும் முழுமையாக செயல்வடிவம் பெறவில்லை. இந்த நிலையில் இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு ஆறுதல் தருவதாக உள்ளது. சமூக நீதி வரலாற்றில் முக்கிய நகர்வாக உள்ளது.

மாநிலங்கள் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கும் 15 சதவீதம்மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் இளங்கலை இடங்களிலும், 50 சதவீத முதுநிலை மருத்துவஇடங்களிலும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவு தமிழகத்துக்கு கிடைத்த வெற்றியாகும். குறிப்பாக திமுகவின் சமூக நீதிபோராட்டத்துககு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

திமுக தொடர்ந்த வழக்கில் தான் சென்னை உயர்நீதிமன்றம் கடந்தாண்டு ஜூலை 27-ம் தேதி அகில இந்திய தொகுப்புக்கு அளிக்கப்படும் மருத்துவக்கல்வி இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமை உள்ளது என்ற வரலாற்றுச்சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. 2021-22 ஆம் கல்வியாண்டில் இருந்து மொத்தம் 4,000 இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு மருத்துவக்கல்வி கிடைக்கப் போவதை திமுகவின் சட்டரீதியான சமூக நீதிப்போராட்டம் மூலம் உறுதி செய்து சாதனை படைத்துள்ளது.

திமுக ஆட்சி அமைந்ததும் கிடைத்துள்ள சமூக நீதிப் போராட்டத்தின் இந்த முதல் வெற்றியில் தமிழகத்தில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக்கல்வி அகில இந்திய தொகுப்பில் 27 சதவீதம் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாலும், 69 சதவீதஇட ஒதுக்கீட்டின்படி பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்என்பது தான் எங்கள் அழுத்தமான கோரிக்கையாகும். அதை அடையும் வரை திமுகவின் தலைமையிலான அரசு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x