Published : 30 Jul 2021 03:17 AM
Last Updated : 30 Jul 2021 03:17 AM
திருப்பத்தூர்: நிலத்துக்கு ஏற்றபடி கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்வுக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்களில் காணொலி காட்சி மூலம் விவசாயிகள் குறை தீர்வுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தவாறு மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
அப்போது விவசாயிகள் கூறும்போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் சிறு, குறு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரிவரத்துக் கால்வாய்களை சீர்படுத்த வேண்டும். மேலும், வரத்து கால்வாயின் இருபுறமும் உள்ள முள்வேலி மரங்களை அகற்றிவிட்டு பயன்தரக் கூடிய மரக்கன்றுகளை நட வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் அதிக பட்சமாக ரூ.1 லட்சம் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த தொகை விவசாயப் பணிக்கு போதுமானதாக இல்லை. எனவே, நிலத்துக்கு ஏற்றவாறு கடன் தொகையை வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகள் மட்டுமின்றி இதர வங்கிகளில் வில்லங்க சான்று இல்லாமல் கடன் வழங்க வேண்டும்.100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாய பணிக்கு பயன்படுத்த உத்தரவிட வேண்டும். வேளாண் விரிவாக்க மையத்தில் பயறு வகைகளை போதுமான அளவுக்கு இருப்பு வைத்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும். உரங்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கக் கூடாது" என்றனர்.
இக்கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ராஜசேகர் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT