Published : 29 Jul 2021 03:13 AM
Last Updated : 29 Jul 2021 03:13 AM
கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல்வராக பசவராஜ் பொம்மை (61) நேற்று பதவியேற்றுக் கொண்டார். பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடந்த விழாவில் அவருக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கர்நாடக முதல்வராக இருந்த பி.எஸ்.எடியூரப்பாவுக்கு 78 வயது நிறைவடைந்ததால் பாஜக மேலிட உத்தரவின்பேரில் கடந்த 26-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய எம்எல்ஏவை தேர்வு செய்வதற்காக நேற்று முன்தினம் மாலை பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மையின் மகனும் எடியூரப்பாவின் ஆதரவாளருமான பசவராஜ் பொம்மை புதிய முதல்வராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர், ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
அதை ஆளுநர் ஏற்றுக் கொண்டதை யடுத்து, புதன்கிழமை காலை 11 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பசவராஜ் பொம்மை நேற்று காலை தனது குடும்பத்தினருடன் பெங்களூரு ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். பின்னர் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், கிஷன் ரெட்டி, பாஜக மேலிட பொறுப்பாளர் அருண் சிங், முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆகியோருடன் ஆளுநர் மாளிகைக்கு வந்தார்.
ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள கண்ணாடி மாளிகையில் எளிமையான முறையில் நடைபெற்ற விழாவில், முதல் வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட், பதவி பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். பசவராஜ் பொம்மை, கடவுளின் பெயரால் பதவியேற்றுக் கொண்டார்.
பதவியேற்பு விழாவில் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், பாஜக மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், பாஜக தேசிய செயலாளர் சி.டி.ரவி உட்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
புதிய முதல்வருக்கு தர்மேந்திர பிர தான், எடியூரப்பா உள்ளிட்டோரும், அவரது குடும்பத்தினரும் பூங்கொத்துகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர். பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரும் அவருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘முதல்வராக பதவியேற்றுள்ள பசவராஜ் பொம்மைக்கு வாழ்த்துகள். சட்டப்பேரவையிலும் நிர்வாகத்திலும் நீண்ட அனுபவம் வாய்ந்த இவர் மிகவும் சிறப்பான முறையில் கடமையை செய்வார். கர்நாடகாவில் வியக்கத்தக்க பணிகளை மேற்கொள்வார் என நம்புகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
எடியூரப்பாவுக்கு பாராட்டு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT