Published : 28 Jul 2021 03:15 AM
Last Updated : 28 Jul 2021 03:15 AM

பிரதமர் நரேந்திர மோடியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு :

பிரதமர் நரேந்திர மோடியை, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார்.

சமீபத்தில் நடந்த மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி இருந்தது. இறுதியில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார்.

திரிணமூல் அரசு 3-வது முறையாக பதவியேற்ற பிறகு மாநிலம்முழுவதும் பாஜக ஆதரவாளர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்தது. இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த மே மாதம் மேற்குவங்கத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவரது தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு மம்தாபானர்ஜி காலதாமதமாக வந்தார்.மனுவை அளித்துவிட்டு கூட்டத்தில் பங்கேற்காமல் புறப்பட்டு சென்றார். இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்த பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடியை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு மம்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மேற்குவங்க கரோனா நிலவரம் குறித்து பிரதமரிடம் ஆலோசனை நடத்தினேன். மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதல்கரோனா தடுப்பூசிகள், மருந்துகளை வழங்குமாறு கோரினேன். மாநிலத்தின் பெயரை மாற்றம் செய்யும் திட்டம் நீண்டகாலமாக கிடப்பில் உள்ளது. அதற்கு அனுமதி வழங்குமாறு கோரினேன்.

2 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லிக்கு வந்துள்ளேன். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை புதன்கிழமை சந்தித்துப் பேசுவேன். எதிர்க்கட்சிகளை நான் ஒன்றிணைக்க வேண்டிய அவசியமில்லை. நாடே எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும்.

குடியரசுத் தலைவரை சந்திக்க நேரம் கேட்டிருந்தேன். இதற்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். 2 தவணை தடுப்பூசியும் போட்டுவிட்டேன். இதன் பிறகும் பரிசோதனை தேவை என்று வலியுறுத்துகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திரிணமூல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் குணால் கோஷ் கூறும்போது, "பிரதமரை சந்தித்தபோது மழையில் நனையாமல் இருக்கமம்தா பானர்ஜி குடை பிடித்திருந்தார். பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளில் இருந்து மக்களை காக்க ஒட்டுமொத்த நாட்டுக்கும் அவர் குடை பிடிப்பார்.டெல்லியில் 5 நாட்கள் மம்தாதங்கியிருந்து முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x