Published : 26 Jul 2021 03:12 AM
Last Updated : 26 Jul 2021 03:12 AM
கோவையில் தொடர்மழையால் 5 குளங்களுக்கு நீர் வரத்து இருந்தது. இதில் மூன்று குளங்கள் நிரம்பியதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. சிறுவாணி, வெள்ளியங்கிரி மலைப்பகுதிகளில் பெய்த மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சிறுவாணி அணை மற்றும் நொய்யலைச் சார்ந்துள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதுதொடர்பாக பொதுப்பணித்துறையினர் கூறும்போது, "தொடர் மழையால் 5 குளங்களுக்கு நீர்வரத்து இருந்தது. அதில், செம்மேட்டை அடுத்துள்ள உக்குளம் நிரம்பிவிட்டது. சித்திரைச்சாவடி தடுப்பணையிலிருந்து பிரிந்து செல்லும் வாய்க்கால் மூலம் 9 குளங்கள் பயன்பெறுகின்றன. அவற்றில், புதுக்குளம் நிரம்பிவிட்டது. கொளராம்பதி குளத்தில் 65 சதவீதமும், நரசாம்பதி குளத்தில் 75 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது. கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி, முத்தண்ணன் குளங்களில் சுமார் 90 சதவீதம் அளவு நீர் உள்ளது. மாதம்பட்டி அருகேயுள்ள தடுப்பணையிலிருந்து குனியமுத்தூர் வாய்க்கால் மூலம் பயன்பெறும் கங்கநாராயணசமுத்திரம் குளம் முழுகொள்ளளவை எட்டியுள்ளது. சொட்டையாண்டி குட்டையில் 35 சதவீதமும், பேரூர் பெரியகுளத்தில் 65 சதவீதமும், குனியமுத்தூர் செங்குளத்தில் 35 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது. குறிச்சி குளத்தில் 80 சதவீதம், வெள்ளலூர் குளத்தில் 50 சதவீதம், சிங்காநல்லூர் குளத்தில் 90 சதவீதம் தண்ணீர் உள்ளது’’ என்றனர்.
கோவை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம்: சின்கோனா 53 மி.மீ, சோலையாறு 93, சின்னகல்லாறு 68, வால்பாறை பிஏபி 29, வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம் 27, பொள்ளாச்சி 7, ஆழியாறு 1.4 மி.மீ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT