Published : 26 Jul 2021 03:13 AM
Last Updated : 26 Jul 2021 03:13 AM

மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்க - சிறிய பேருந்துகளை இயக்க பயணிகள் வலியுறுத்தல் :

சென்னை

மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் சிறிய பேருந்துகளை இயக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் தற்போது 2 தடங்களில் மொத்தம் 54 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் விமான நிலையம், சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் விரைவாகச் செல்ல முடிகிறது. இதனால் பயணிகளும் ஆர்வமாக மெட்ரோ ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.

கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு பயணிகளின் தேவைக்கு ஏற்றார்போல மெட்ரோ ரயில்கள் அதிகரித்து இயக்கப்படுகின்றன. ஆனால் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பொதுமக்கள் வந்து செல்ல வசதியாக இணைப்பு வாகன சேவை மீண்டும் முழு அளவில் இல்லை என புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள வடசென்னை பகுதியில் போதிய அளவில் இணைப்பு வாகன வசதி இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

இது தொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, “கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு மக்கள் வழக்கம் போல் பயணம் செய்யத் தொடங்கி விட்டனர். பொது போக்குவரத்து வசதிகளும் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து முக்கிய நிறுவனங்கள், குடியிருப்புப் பகுதிகளை இணைக்கும் வகையில் சிறிய பேருந்துகளின் சேவை இல்லாததால், பயணிகள் வந்து செல்ல கஷ்டப்படுகின்றனர்.

எனவே, பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் போதிய அளவில் சிறிய பேருந்துகளை இயக்க வேண்டும். இதற்கான காலஅட்டவணையும் அறிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்'' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x