Published : 25 Jul 2021 03:13 AM
Last Updated : 25 Jul 2021 03:13 AM

‘சார்பட்டா’ திரைப்படத்தில் எம்ஜிஆரை தவறாக சித்தரிப்பதா? : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

எம்ஜிஆரை ‘சார்பட்டா’ திரைப்படத்தில் தவறாக சித்தரித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் ‘சார்பட்டா பரம்பரை’ என்ற திரைப்படம் ஓடிடியில் கடந்த 22-ம் தேதி வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துமுன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை:

‘சார்பட்டா’ திரைப்படம் முழுக்க திமுக பிரச்சாரப் படமாகவே எடுக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் எம்ஜிஆருக்கும், விளையாட்டுத் துறைக்கும் சம்பந்தம் இல்லாததுபோல இதில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

திரைப் பயணம் தொடங்கி அரசியல் பயணம் வரை விளையாட்டை விடாப்பிடியாக கைக்கொண்டவர் எம்ஜிஆர். மான்கொம்பு சண்டை, வாள் சண்டை, குத்துச்சண்டை, குதிரையேற்றம் என ஒவ்வொரு படத்திலும் விளையாட்டு வீரராகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்.

1980-ல் தமிழ்நாடு அமெச்சூர் பாக்ஸர் சங்கத்துக்கு நிதி திரட்டும் வேடிக்கை குத்துச்சண்டையில் பங்கேற்க முகமது அலியை சென்னைக்கு அழைத்து வந்தார். முதல்வரான பிறகு, விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க எண்ணற்ற சலுகைகளை வழங்கினார். நலிவடைந்த வீரர்களுக்கு நிதியளித்து சர்வதேசப் போட்டிகளில் விளையாடச் செய்தார்.

ஆனால், திமுக ஆட்சியில் மட்டுமே விளையாட்டு வீரர்கள் மதிக்கப்பட்டது போலவும், எம்ஜிஆர் அவர்களை கைகழுவியது போலவும் இப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வரலாற்றைவிட கூர்மையானது கலை. எனவே, அதில் உண்மைகள் மறைக்கப்படுவது சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கு மட்டுமின்றி, வருங்கால தலைமுறைக்கே செய்யும் துரோகம். எத்தனையோ வீரர்களை ஊக்குவித்த எம்ஜிஆரை தவறாக சித்தரித்ததை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x