Published : 24 Jul 2021 03:12 AM
Last Updated : 24 Jul 2021 03:12 AM

மக்களுக்கு எளிதாக, வெளிப்படைத் தன்மையுடன் - பத்திரப்பதிவு சேவை இருக்க வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

பத்திரப் பதிவு சேவை மக்களுக்கு ஏற்ற வகையில் எளிதாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் வணிக வரி, பத்திரப் பதிவுத்துறையின் செயல்பாடுகள் குறித்தஆய்வுக்கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. இதில் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி முதல்வர் பேசியதாவது:

வணிக வரி, பதிவுத் துறை வரி வருவாய் இலக்கை முழுமையாக அடைய முனைப்புடன் செயல்பட வேண்டும். நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசிடம் இருந்து பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வணிக வரி, பதிவுத் துறை தொடர்பாக கட்டுப்பாட்டு அறை மூலம் வணிகர்கள், பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் எவ்வித தொய்வுமின்றி தீர்வு காணப்பட வேண்டும். மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த வரி வருவாய் அத்தியாவசியமானது. எனவே, வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை உடனுக்குடன் கண்காணித்து, அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய வரியை வசூலிக்க உரியநடவடிக்கை எடுக்க வேண்டும்.

வணிகர்நல வாரியம்

வணிகர் நல வாரியம் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். நல வாரியத்தில் வணிகர்கள் உறுப்பினராக சேர்ந்து, அதன் சேவைகளைப் பெற துறைஅலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

பதிவுத் துறையில் சார்பதிவாளர் அலுவலகங்களில் உள்ள பத்திரங்களை கணினியில் பதிவு செய்யும் பணிகள் முடிந்த பிறகு, பொதுமக்கள் இணையம் வழியாக ஆவணங்களின் சான்றிட்ட நகல்களை பெற வழிவகை செய்ய வேண்டும். இதன்மூலம், பட்டா மாறுதல் செய்யும்போது சம்பந்தப்பட்ட ஆவணங்களை வருவாய்த் துறையினர் இணையதளத்தில் பார்வையிட முடியும். பத்திரப் பதிவு அலுவலகங்களின் சேவை மக்களுக்கு ஏற்ற வகையில் எளிதாக, வெளிப்படைத் தன்மையுடன் அமைய வேண்டும்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

இக்கூட்டத்தில், அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி, வணிக வரி ஆணையர் மு.சித்திக், பதிவுத் துறை தலைவர் ம.சிவன்அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x