Published : 23 Jul 2021 07:15 AM
Last Updated : 23 Jul 2021 07:15 AM
ஜோலார்பேட்டையில் வீடு, வீடாக சென்று அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகம் வழங்கி கல்வி தொலைக்காட்சியில் பாடங்கள் நடத்தப்படும் கால அட்டவணையை வழங்கி அரசுப்பள்ளியில் சேர விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் அரசு மாதிரி மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளி திறக்கப்படாமல் உள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்து வருவதால், தற்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன்படி, ஜோலார்பேட்டை அரசு மாதிரி மேல்நிலை பள்ளி யில் நடப்பாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆஜாம் தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் ஜோலார்பேட்டை, சோலையூர், காவேரிப்பட்டு, ஏலகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று மாணவர்களை ஜோலார்பேட்டை அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் சேர்க்க பெற்றோர் முன் வரவேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பிறகு, அப்பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு நடப்பாண்டுக்கான இலவச பாடபுத்தங்களை வழங்கி கல்வி தொலைக்காட்சி மூலம் நடத்தப்படும் பாடங்களுக்கான கால அட்டவணையை வழங்கி, பள்ளிகள் திறக்கும் வரை கல்வி தொலைக்காட்சியில் தினசரி நடத்தப்படும் பாடங்களை தொடர்ந்து கவனித்து படித்து வர வேண்டும் என அறிவுறுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT