Published : 22 Jul 2021 03:13 AM
Last Updated : 22 Jul 2021 03:13 AM
கோவை மாநகராட்சியின் கீழ் உள்ள அனைத்து வகை பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் தற்போது வரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது என மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 17 மேல்நிலைப் பள்ளிகள், 10 உயர்நிலைப் பள்ளிகள், ஒரு நடுநிலைப் பள்ளி, 13 உயர் தொடக்கப் பள்ளிகள், 42 ஆரம்பப்பள்ளிகள், காது கேளாதோருக்கு ஒரு சிறப்புப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. உயர் தொடக்கப்பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன.
மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போர்டு வசதியுடன் கூடிய வகுப்பறைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், தூய்மையான மற்றும் சுகாதாரமான கழிப்பறைகள், ஆய்வகங்கள், கணினி ஆய்வகங்கள், நூலக வசதிகள் உள்ளன. தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் கற்பித்தல் பணி நடைபெற்று வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் யாவும் மாநகராட்சிப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.
கரோனா பரவல் காரணமாக பள்ளியில் சென்று பயில முடியாத சூழலிலும் இணையவழி வகுப்புகள் மூலமாக கற்பித்தல் நடைபெறுகிறது. கல்வித் தொலைக்காட்சி வாயிலாகவும் கற்பித்தல் நடைபெறுகிறது. கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 2021-2022-ம் கல்வியாண்டில் மொத்தமாக 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தற்போது வரை புதிதாக சேர்ந்துள்ளனர். பெற்றோர் தங்களது குழந்தைகளை மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்த்து தரமான கல்வி பெறும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT