Published : 21 Jul 2021 03:15 AM
Last Updated : 21 Jul 2021 03:15 AM

ஆசிரியர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு - காவல் ஆணையர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு :

சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், ஆன்லைன் வகுப்புகளின்போது அரைகுறை ஆடையுடன் ஆபாசமாக நடந்து கொண்டதாகவும் முன்னாள் மாணவிகள் புகார் அளித்தனர்.

அதன்பேரில் ராஜகோபாலனை அசோக்நகர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின்கீழ் கடந்த மே மாதம் கைது செய்தனர். பின்னர் அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் மீது போடப்பட்டுள்ள குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி சுதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

‘முன்னாள் மாணவி ஒருவர், கடந்த 2015-ம் ஆண்டு எனது கணவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகாரில் தெரிவித்துள்ளார். அப்போது ஆன்லைன் வகுப்புகள் கிடையாது. இந்த புகார் நீண்ட காலத்துக்குப் பிறகு தாமதமாக உள்நோக்கத்துடன் அளிக்கப்பட்டுள்ளது. செவி வழி தகவலின் அடிப்படையிலேயே போலீஸார் எனது கணவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் எனது கணவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்திருப்பது சட்டவிரோதம் என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக தமிழக அரசு, மாநகர காவல் ஆணையர் மற்றும் சிறைத்துறை ஆகியோர் 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x