Published : 20 Jul 2021 03:13 AM
Last Updated : 20 Jul 2021 03:13 AM

ஆல்ஃபா வைரஸைவிட - டெல்டா வகை தொற்று 40 முதல் 60% அதிகம் பரவும் : கரோனா கூட்டமைப்பு எச்சரிக்கை

டெல்டா வகை தொற்று, ஆல்ஃபா வகையைவிட 40 முதல் 60% வரை அதிகமாகப் பரவக்கூடியது என மரபியலுக்கான இந்திய கரோனா கூட்டமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் என் கே அரோரா எச்சரித்துள்ளார்.

டெல்டா வகை தொற்று வேகமாக பரவுவதன் காரணம், மரபணு கண்காணிப்பின் மூலம் அதன் பரவலை எவ்வாறு கட்டுப்படுத்துவது போன்றவை குறித்து மரபியலுக்கான இந்திய கரோனா கூட்டமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் என்.கே. அரோரா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

பி.1.617.2 என்ற கோவிட்-19 வகை, டெல்டா வகை என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதன் முதலில் கண்டறியப்பட்ட இந்த வகை தொற்று, நம் நாட்டில் இரண்டாவது அலை உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. தற்போது ஏற்படும் புதிய பாதிப்புகளில் 80%, இந்த வகை தொற்றாகும். டெல்டா வகை தொற்று, ஆல்ஃபா வகையைவிட 40 முதல் 60% வரை அதிகமாகப் பரவக் கூடியது. மகாராஷ்டிராவில் உருவான இந்தத் தொற்று, வடக்கு நோக்கி நகர்ந்து நாட்டின் மேற்கு மாநிலங்களிலும் அதைத்தொடர்ந்து மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. மனித உயிரணுக்களில் புகுந்த பிறகு இந்த தொற்று வகை வேகமாகப் பரவுகிறது. நுரையீரல் போன்ற உறுப்புகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

டெல்டா பிளஸ் வகை- ஏஒய்.1 மற்றும் ஏஒய்.2 ஆகியவை தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 55 முதல் 60 பேருக்கு இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. ஏஒய்.1 வகை தொற்று நேபாளம், போர்ச்சுகல், ஸ்விட்சர்லாந்து, போலாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏஒய்.2 வகை தொற்று, குறைவான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் பரவும் தன்மை, தீவிரம் மற்றும் தடுப்பூசிகளிலிருந்து தப்பிக்கும் அம்சங்கள் பற்றி இன்னும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தற்போது பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள், டெல்டா வகை தொற்றுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் என்று இது சம்பந்தமாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் மேற்கொண்டுள்ள ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x