Published : 19 Jul 2021 03:12 AM
Last Updated : 19 Jul 2021 03:12 AM

மகாராஷ்டிராவில் கொட்டித் தீர்த்த கனமழை - மும்பையில் ஒரே நாளில் 25 பேர் உயிரிழப்பு : நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்

மகாராஷ்டிராவில் பெய்து வரும் பலத்த மழைக்கு ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஜூன் 9-ம் தேதி பருவமழை தொடங்கியது. முதல் நாளே பலத்த மழையால் மும்பை நகரமேவெள்ளக்காடாக மாறியது. அதன்பிறகு அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், மும்பை, புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரைபலத்த மழை பெய்தது. ஒரே நாள்இரவில் கொட்டித் தீர்த்த கனமழையால் நகரின் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.

பலத்த மழை காரணமாக தலைநகர் மும்பையில் செம்பூர் பாரத் நகர் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு இருந்த குடிசைப் பகுதிகள் அப்படியே சரிந்து மண்ணில் புதைந்தன.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் தீயணைப்புப் படையினர், போலீஸாரும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மற்றொரு புறநகர் பகுதியான செம்பூர் விக்ரோலியில் 2 அடுக்கு வீடு இடிந்து விழுந்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இடுபாடுகளில் சிக்கியிருந்தோரை தீயணைப்புப் படையின் மீட்டனர்.

செம்பூர் பாரத் நகர் பகுதியில் இருந்து 15 பேரும், விக்ரோலி சூர்யா நகர் பகுதியில் இருந்து 9 பேரும் உயிருடன் மீட்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வீடுகள் இடிந்து விழுந்ததால் நேற்றுஒரேநாளில் 25 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி மேலும் சிலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மழை காரணமாக தண்டவாளங்களில் வெள்ள நீர் தேங்கியிருப்பதால் ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக மத்தியரயில்வே மண்டலம் அறிவித்துள்ளது.

பிரதமர் இரங்கல்

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும்காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x