Published : 17 Jul 2021 03:15 AM
Last Updated : 17 Jul 2021 03:15 AM

தமிழக பாஜக தலைவரானார் அண்ணாமலை : மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் பொறுப்பேற்றார்

சென்னை

தமிழக பாஜக தலைவராக கே.அண்ணாமலை நேற்று பொறுப்பேற்றார். கட்சியின் மூத்த தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து, புதிய தலைவராக கே.அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, தலைவர் பொறுப்பேற்பதற்காக கோவையில் இருந்து கடந்த 14-ம் தேதி புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயம் வந்தார்.

அவருக்கு மேளதாளங்கள் முழங்க பூரண கும்ப மரியாதையுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மூத்த தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து, தலைவராக நியமனம் செய்யப்பட்டதற்கான ஆணையை பாஜகவின் அகில இந்திய பொதுச்செயலாளர் சி.டி.ரவி வழங்கினார். இதையடுத்து கே.அண்ணாமலை பொறுப்பேற்றுக் கொண்டார். இந்தநிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், முன்னாள் மாநில தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: கட்சியை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்வதுதான் என்னுடைய ஆசை.சாதாரண மனிதனும் அமைச்சராகவும் தலைவராகவும் ஆக முடியும் என்று சூழல் இருப்பதால் பாஜகவில்தான் சமூகநீதியை பார்க்க முடியும். பிரதமர் மோடி திட்டத்தால் பயனடைந்த 3.50 கோடி பேரை கிராமம்தோறும் சந்திக்கும் எண்ணம் உள்ளது.

திமுகவின் 70 நாள் ஆட்சியில் இதுவரை ஒரு தேர்தல் வாக்குறுதிகளை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. நீட் தேர்வினால் ஏற்படும் நன்மைகளை எடுத்து கூறுவோம். தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசி வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம். மேகேதாட்டு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி ஒரு சொட்டு நீர் குறைவில்லாமல் வரவேண்டும். மேகேதாட்டு அணை கட்ட தமிழக பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கொங்கு நாடு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்துதொடர்புடைய மாவட்ட தலைவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

இதனிடையே மத்திய அமைச்சர் பதவி ஏற்பு விவர குறிப்பில் கொங்கு நாடு என குறிப்பிடப்பட்டது குறித்த கேள்விக்கு அது அலுவல் பிழை என எல்.முருகன் விளக்கமளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x