Published : 16 Jul 2021 03:11 AM
Last Updated : 16 Jul 2021 03:11 AM

பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக சித்துவை நியமிக்க திட்டம் :

பஞ்சாப் காங்கிரஸ் உட்கட்சி மோதலுக்கு தீர்வு காணும் முயற்சியாக மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் அம்மாநில காங்கிரஸில் உட்கட்சிப் பூசல் வலுத்துள்ளது. பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்குக்கு எதிராக முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து போர்க்கொடி தூக்கியுள்ளார். சித்துவுக்கு ஆதரவாக சில காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சிலர் செயல்பட்டு வருகின்றனர்.

தேர்தல் நெருங்கி வரும்நிலையில் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இருதரப்பையும் சமாதானப்படுத்தவும் காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது. அதன்படி, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமிக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், முதல்வர் பதவியில் அம்ரீந்தர் சிங் தொடர்வார் என்றும் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அம்ரீந்தர் சிங்கே முன்னிறுத்தப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியை சமாளிக்கவும் எல்லா தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையிலும் மாநில அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படும் என்றும் காங்கிரஸ் மேலிட தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x