Published : 16 Jul 2021 03:12 AM
Last Updated : 16 Jul 2021 03:12 AM

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால் - பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5000 கனஅடியாக உயர்வு :

நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால், பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 5000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் குடிநீர் மற்றும் பாசனத்தேவைகளுக்கு ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்கி வருகிறது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 12-ம் தேதி விநாடிக்கு 1500 கனஅடி என்ற அளவில் நீர்வரத்து இருந்த நிலையில், 13-ம் தேதி நீர்வரத்து 3000 கனஅடியைத் தாண்டியது.

நேற்று அதிகாலை 4 மணிக்கு அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 5494 கனஅடியாக இருந்த நிலையில், மாலை வரை தொடர்ந்து 5000 கனஅடி என்ற அளவில் நீர் வரத்து இருந்தது.

அணையின் நீர்மட்டம் 94.40 அடியாக உள்ளது. அணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்துக்கு 650 கனஅடி நீரும், குடிநீர் தேவைக்க 200 கனஅடி நீர் என விநாடிக்கு 850 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

மழையளவு விவரம்

இதனிடையே ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மழை பெய்தது. மழையளவு விவரம் (மி.மீ): சென்னிமலை 25, பெருந்துறை 24, மொடக்குறிச்சி 21, குண்டேரிப்பள்ளம் 13, அம்மாப்பேட்டை 8, கொடுமுடி 6 மி.மீ. மழை பெய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x