Published : 15 Jul 2021 03:13 AM
Last Updated : 15 Jul 2021 03:13 AM
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று மாலை டெல்லி சென்றார். தமிழகத்துக்கு கூடுதல் கரோனா தடுப்பூசி வழங்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சந்திக்கவுள்ளார். இதற்காக நேற்று மாலை மா.சுப்பிரமணியன் விமானம் மூலம் டெல்லி சென்றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து தமிழகத்துக்கு தேவையான மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியது குறித்து வலியுறுத்தப்படும். தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்குவது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகளை தொடங்குவது குறித்தும் விவாதிக்க உள்ளோம்.
மேலும் கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது, 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதி, செங்கல்பட்டு மற்றும் குன்னூர் தடுப்பூசி நிறுவனத்தில் உற்பத்தியை தொடங்குவது என்பது உள்ளிட்ட 13 கோரிக்கைகளை இந்த சந்திப்பின்போது வலியுறுத்த இருக்கிறோம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த சந்திப்பின்போது எடுத்துக்கூறுவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT