Published : 13 Jul 2021 03:13 AM
Last Updated : 13 Jul 2021 03:13 AM

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 19-ல் தொடங்கி ஆகஸ்ட் 13 வரை நடக்கிறது : மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் 19-ம் தேதி கூடுகிறது. ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடக்கும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த ஆண்டுகரோனா வைரஸ் முதல் அலையின் போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடர் மற்றும் மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே முடித்துக்கொள்ளப்பட்டது. குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டது.

இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரும் கரோனா பரவலினால் பாதிக்கப்பட்டது.

தற்போது நாடு முழுவதும் 2-வது அலையின் தீவிரம் தணிந்துள்ள நிலையில், மழைக்கால கூட்டத் தொடர் வரும் 19-ம் தேதி தொடங்க உள்ளது. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதாவது:

கரோனா விதிமுறைகள்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 13-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும். மொத்தம் 19 நாட்கள் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடக்கும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். கரோனா விதிமுறைகளை பின்பற்றி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஊடகத்தினரும் அனுமதிக்கப்படுவார்கள். நாடாளு மன்றத்துக்கு வருபவர்களுக்கு கரோனா பரிசோதனை கட்டாய மில்லை. ஆனால், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் கரோனாபரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வோம்.

இவ்வாறு சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார்.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளுடன் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டு போல் இல்லாமல், இந்த முறை சமூக இடைவெளியுடன் எம்.பி.க்கள் அமர்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எம்.பி.க்களுக்கு தடுப்பூசி

இதுவரை 444 மக்களவை எம்.பி.க்களும் 218 மாநிலங்களவை எம்.பி.க்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாகவும் சில எம்.பி.க்கள் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றும் நாடாளுமன்ற செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், தடுப்பூசி போட்டுக் கொண்டது குறித்து 30 எம்.பி.க்கள் தகவல் தெரிவிக்கவில்லை என்றும் அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்களா என்பதை அறிய அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாகவும் நாடாளுமன்ற செயலக அதிகாரி கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x