Published : 13 Jul 2021 03:13 AM
Last Updated : 13 Jul 2021 03:13 AM

உடுமலை-தாராபுரம் சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை :

உடுமலை: உடுமலை-தாராபுரம் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. 15 மீட்டர் அகலமுடைய இந்த சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள இடங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி 2-வது கி.மீ. தொடங்கி 800 மீட்டர் தொலைவுக்கு சாலையின் இருபுறமும் தலா ஒரு மீட்டர் அகலப்படுத்தும் பணிகள், கடந்த சில மாதங்களுக்குமுன் தொடங்கப்பட்டன. இதற்காக சாலையின் நடுவே இருந்த டிவைடர்கள் அகற்றப்பட்டன. தற்போதுள்ள சாலையின் இருபுறமும் அகலப்படுத்துவதற்காக தோண்டப்பட்டு, கிரவல் மண் நிரப்பப்பட்டது. ஏப்ரல் மாதம் கரோனா பரவலால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியதால், சாலை விரிவாக்கப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.

இம்மாதம் 5-ம் தேதிமுதல் கரோனா பரவல் குறைந்ததால், ஊரடங்கிலும் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டன. பல இடங்களில் ஒப்பந்தப் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், உடுமலை-தாராபுரம் சாலை விரிவாக்கப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து மடத்துக்குளம் நெடுஞ்சாலைத் துறையினர் கூறும்போது, ‘‘800 மீட்டர் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக ரூ.1.76 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட பணிகள் விரைவில் தொடங்க, ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x