Published : 13 Jul 2021 03:16 AM
Last Updated : 13 Jul 2021 03:16 AM
புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர் வைக் கண்டித்து, காங்கிரஸ் சார்பில் காரைக்கால் தலத்தெரு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி மாட்டு வண்டியை ஓட்டிச் சென்றார். இதில், புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், காரைக்கால் மாவட்டத் தலைவர் ஆர்.பி.சந்திரமோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் நாராயணசாமி கூறியதாவது: கரோனா பரவல் சூழலால் வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டிருக்கும் நிலையில், மத்திய அரசின் அலட்சியப்போக்கு மக்களை பெருமளவு பாதிக்கச் செய்துள்ளது. எரிபொருட்களின் விலையை குறைக்காவிட்டால், பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்ற கோஷத்தை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.
புதுச்சேரியில் அமைந்துள்ள முதல்வர் ரங்கசாமி தலைமையிலான புதிய அரசு, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டால்தான், கரோனாவில் இருந்து புதுச்சேரியை பாதுகாக்க முடியும். கரோனா 3-வது அலை குழந்தைகளைப் பாதிக்கும் என்று சொல்லப்படுவதால், பள்ளிகள் திறக்கும் முடிவை புதுச்சேரி அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு மறுசீரமைப்புப் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் கொங்கு நாடு சர்ச்சை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற விஷம வேலைகளில் பாஜக இறங்கியுள்ளது. தமிழகத்தை யாராலும் பிரிக்க முடியாது. இந்த எண்ணம் கொண்டோரை தமிழர்கள் தூக்கி எறிவார்கள் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT