Published : 13 Jul 2021 03:16 AM
Last Updated : 13 Jul 2021 03:16 AM

ஆற்காடு அருகே இரவில் ஏற்பட்ட தகராறில் - இளைஞரை கொலை செய்த லாரி ஓட்டுநர் தலைமறைவு :

மணிகண்டன். (கோப்புப் படம்)

ஆற்காடு

ஆற்காடு அருகே இரு சக்கர வாகனத்தை லாரி முந்திச் சென்றதால் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கொலை செய்துவிட்டு தப்பிய லாரி ஓட்டுநரை காவல் துறையினர் தேடி வருகினற்னர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நாதமுனி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (28). வாடகை வாகன ஓட்டுநர். இவர், நேற்று முன்தினம் இரவு ஆற்காடு தோப்புக்கானா பகுதியைச் சேர்ந்த அருண் (21) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் மேல்விஷாரத்தில் இருந்து ஆற்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, வேகமாக சென்ற லாரி ஒன்று இவர்கள் மீது மோதுவது போல் ஆபத்தான முறையில் கடந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த மணிகண்டன், அருண் ஆகியோர் லாரியை விரட்டிச் சென்று வேப்பூர் அருகே மடக்கி லாரி ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பினர் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநர் மறைத்து வைத்திருந்த கத்தியால் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார். இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர்.

பின்னர், லாரியுடன் ஓட்டுநர் அங்கிருந்து சென்றுவிட்டார். அவ் வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் சிலர் பார்த்தபோது மண்கண்டன் உயிரிழந்தது தெரியவந்தது. ஆபத்தான நிலையில் இருந்த அருணை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்த தகவலின் பேரில் ஆற்காடு நகர காவல் நிலைய ஆய்வாளர் விநாயகமூர்த்தி விரைந்து சென்று மணிகண்டன் உடலை மீட்டு பிரேதப் பரிசோ தனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

கொலை சம்பவம் குறித்து ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா விசாரணை நடத்தியதுடன், தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தர விட்டார்.

தனிப்படையினர் நடத்திய முதற் கட்ட விசாரணையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஓட்டுநர், தனது லாரியை காஞ்சிபுரத்தில் நிறுத்திவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. சென்னை துறைமுகத்துக்குச் சென்ற லாரியின் ஓட்டுநர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தலைமறைவாக உள்ள அவரை பிடிக்க மற்றொரு தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்ட பிறகே கொலைக்கான காரணம் முழுமையாக தெரிய வரும் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x