Published : 02 Jul 2021 03:13 AM
Last Updated : 02 Jul 2021 03:13 AM

தடுப்பு நடைமுறைகளை பின்பற்றினால் கரோனா வைரஸ் 3-வது அலை ஏற்படாது : எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா உறுதி

இந்தியாவில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கரோனா 2-வது அலை உச்சத்தில் இருந்தது. அப்போது சில நாட்களில் நாள்தோறும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டது. சராசரியாக 5,000 பேர் உயிரிழந்தனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. தற்போது வைரஸ் பரவல் குறைந்துள்ளதால் ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

இந்த ஆண்டு பிற்பகுதியில் இந்தியாவில் 3-வது கரோனா அலை ஏற்படக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறியதாவது:

நாம் எவ்வாறு நடந்து கொள்கி றோமோ அதை பொறுத்துதான் 3-வது அலை அமையும். தடுப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றினால் கரோனா 3-வது அலை நிச்சயம் ஏற்படாது. அதற்கு நாம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

பல்வேறு மருந்துகளின் கலவையால் கரோனா நோயாளிகள் குணமடைகின்றனர் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் பக்க விளைவுகள் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மேலும் ஆய்வு நடத்தப்பட வேண்டும். நாட்டின் சில பகுதிகளில் கரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. அந்த பகுதிகளில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டும்.

எத்தனை புதிய வைரஸ்கள் உருவானாலும் கவலைப்பட தேவையில்லை. நாம் எச்சரிக்கை யாக இருந்தால் வைரஸ் பரவாது. தற்போது கண்டறியப்பட்டுள்ள டெல்டா பிளஸ் வைரஸ் வேகமாக பரவும். அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றும் என்று தகவல்கள் வருகின்றன. இவை அறிவியல்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x