Published : 25 Jun 2021 03:14 AM
Last Updated : 25 Jun 2021 03:14 AM

எழுத்தாளர் ரமேஷனுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி :

சாகித்ய அகாடமி விருதுபெற்ற மறைந்த எழுத்தாளர் ரமேஷன் நாயருக்கு அவரது சொந்த ஊரான தக்கலை அருகே உள்ள குமாரபுரத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குமாரபுரத்தை சேர்ந்தவர் எழுத்தாளர் ரமேஷன் நாயர். 1948 மே 3-ம் தேதி பிறந்த இவர், கரோனா தொற்றால் தனது 73-வது வயதில் கடந்த 18-ம் தேதி மரணமடைந்தார். குமாரபுரத்தில் அமுதசுரபி இலக்கிய இயக்கம், கன்னியாகுமரி மலையாள அட்சரலோகம் அமைப்பு ஆகியவை சார்பில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

அட்சரலோகம் அமைப்பின் செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமையேற்றார். கவிஞர் குமரிஆதவன் நினைவேந்தல் உரைவழங்கினார். இதில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்று, மலர் அஞ்சலி செலுத்தினர்.

கவிஞர் ரமேஷன்

கவிஞர் ரமேஷன் மணலிக்கரை புனித மரிய கொரற்றி மேல்நிலைப்பள்ளி, ஸ்காட் கிறிஸ்தவகல்லூரி, இந்து கல்லூரி ஆகியவற்றில் பயின்றார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் மலையாள இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவரது மனைவி ரெமா. மகன் மனு ரமேஷன் மலையாள திரைப்பட இசையமைப்பாளர்.

இவரது முதல் கவிதை நூல்`கன்னிப் பூக்கள்’ 1966-ல் வெளியாகியது.அகில இந்திய வானொலியில் பணியாற்றினார். எழுத்து ஆர்வம்காரணமாக விருப்ப ஓய்வு பெற்றுதீவிர இலக்கிய பணியில் இறங்கினார். சுமார் 50 புத்தகங்களை மலையாள இலக்கியத்துக்குத் தந்தவர். 1985-ல் `பத்தாமுதயம்’ திரைப்படத்தில் நான்கு பாடல்கள் எழுதி திரையுலகுக்கு அறிமுகமானார். புகழ்பெற்ற இசையமைப்பாளர்களான கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா இசையில்,165 திரைப்படங்களில் 650-க்கும்அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார். 2,000-க்கும் மேற்பட்ட பக்திபாடல்கள் எழுதியுள்ளார்.தனி ஆல்பங்களில் சுமார் 800 பாடல்கள் வந்துள்ளன.

சிலப்பதிகாரம், திருக்குறள், பாரதியார் பாடல்களை மலையாளத்துக்கு மொழி பெயர்த்தார். அதற்காக, கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் (1-1-2000) அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் பாராட்டும் பரிசும் பெற்றார். கருணாநிதியின் `தென்பாண்டி சிங்கம்’ நூலை மலையாளத்தில் மொழி பெயர்த்தார்.

இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதான சாகித்திய அகாதமி விருதை 2018-ல் 'குருபவுர்ணமி’ நூலுக்காகவும், கேரள அரசின் மாநில விருதையும், சிறந்ததிரைப்பட பாடலுக்காக விருதையும், பத்துக்கும் மேற்பட்ட இலக்கிய விருதுகளையும் பெற்றவர். அதோடு, நாராயண குருவின் கதையை காவியமாக்கிய நூலுக்கு விருது பெற்றார். விவேகானந்தர் குறித்த காவியம், கம்பராமாயணம் மலையாள மொழி பெயர்ப்பு பணி ஆகியவற்றை தொடங்கியிருந்தார். இந்நிலையில்தான், அவர் கரோனாவால் மரணமடைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x